ஹோட்டலில் இலவசமாக தங்க அனுமதி கோரி வெளிநாட்டுக்காரர் ரகளை

புதுடில்லி,டில்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர், தீவிர மதுபோதையில் கத்தியால் தன்னை தானே அறுத்துக் கொண்டார்.

துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஹுன் என்பவர், டில்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள, ஒயிட் குளோ ஹோட்டலில், கடந்த மாதம் 20 முதல், பிப்ரவரி 10 வரை தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் அவர் அறையை காலி செய்து விட்டு, எங்கோ சென்று விட்டு, நேற்று காலையில் அந்த ஹோட்டலுக்கு தீவிர மது போதையில் வந்தார். தன்னை இலவசமாக அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என கூறி, ரகளையில் ஈடுபட்டார்.

ஹோட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அறிந்த அந்த நபர், கத்தியால் தன் உடலில் கீறிக் கொண்டார். இதனால், போலீசார் வருவதற்குள் ஏராளமான ரத்தம் வெளியேறி, மயங்கினார். அவரை உடனடியாக லேடி ஹர்திங்கே மருத்துவ கல்லுாரியில் போலீசார் அனுமதித்தனர். மதுபோதை மற்றும் அதிக ரத்தம் வெளியேறியது குறித்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement