பாகிஸ்தானை திணறடித்த எஸ்-400 ஏவுகணைகள்; ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்கும் இந்தியா

13


புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை, ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்திய அனுமதியளித்துள்ளது.


கடந்தாண்டு நடந்த ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, அத்துமீறிய பாகிஸ்தானின் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் டிரோன்களை வீழ்த்த எஸ்-400 அமைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, ஒரு S-400 நீண்ட தூர ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்குள் 314 கிமீ தொலைவில் இருந்த விமானம் மற்றும் ரேடார் நிலைகளை இந்தியா துல்லியமாக தாக்கியது.

இதனால் பயந்து போன பாகிஸ்தான், தனது விமானங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதி தளங்களுக்கு மாற்றியது. மே 9 மற்றும் 10 தேதிகளில் ஆதம்பூர் மற்றும் புஜ் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த எஸ்-400 அமைப்புகளின் மீது எழுந்த அச்சத்தால் பாகிஸ்தான் விமானப்படை பின்வாங்கியது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நேற்று (பிப்ரவரி 12) கூடியது. அப்போது, மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடிக்கு ராணுவ உபகரணங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 120 குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் 168 நீண்ட தூர ஏவுகணைகள் என மொத்தம் 288 எஸ்-400 ஏவுகணை வாங்க அனுமதியளிக்கப்பட்டது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மேலும் இரண்டு எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் இந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு வரவுள்ளன. இதே கூட்டத்தில் பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement