60 லட்சம் கொள்ளை வழக்கில் 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுடில்லி, வடக்கு டில்லியில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில், 60 லட்ச ரூபாயை பறித்த விவகாரத்தில், ஏழு பேரை கைது செய்துள்ள போலீசார், அந்த துணிகர கொள்ளை யில் ஈடுபட்டது, பணத்தை பறி கொடுத்தவருடன் பயணித்த நபர் தான் என்பதை கண்டறிந்துள்ளனர்.

வடக்கு டில்லியின் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த சந்தீப் சுவாமி என்ற நபர், மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 7 ம் தேதி, அவரும், சிவா என்ற நபரும், ஸ்கூட்டரில் சென்ற போது, கரோல் பாக் அருகே அவர்கள் பயணித்த ஸ்கூட்டரை மறித்த கும்பல், அவர்கள் வசமிருந்த பையை, துப்பாக்கி முனையில் பறித்து தப்பியது.

பணத்தை பறிகொடுத்தவர்கள், கரோல் பாக் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், விசாரித்து வந்தனர்.

போலீசார் கூறியதாவது :

அந்த குற்றம் நடந்த போது, சந்தீப் சுவாமியுடன் ஸ்கூட்டரில் சென்ற சிவா என்பவர் குறித்து, ஆராய்ந்தோம்.

அவர் பல வழக்குகளில் தொடர்புடையவராக இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதே அவர் தான் என்பதை பின்னர் அறிந்தோம்.

அவர்களை மறித்த, இரண்டு டூ - வீலர்களில் வந்த ஆறு பேரை தேடி கண்டுபிடித்தோம். அவர்கள் வசமிருந்து, மூன்று மோட்டார் பைக்குகள், மொபைல் போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தோம்.

ராஜிவ், கரண், ஹிதேஸ்வர், சன்னி, கர்நைல் சிங் மற்றும் நதீம் ஆகியோருடன், சிவாவையும் கைது செய்து விசாரித்த போது, சிவாவின் துாண்டுதலால் தான், இந்த முறைகேட்டில் அவர்கள் ஈடுபட்டது தெரிந்தது.

இதற்காக, 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை பிடித்துள்ளோம்.

இந்த கும்பல் போலீசில் சிக்கியுள்ளதால், கரோல் பாக் பகுதியில் அவர்கள் நடத்தவிருந்த, 2 கோடி ரூபாய் கொள்ளையை தடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement