குழந்தைகள் விற்பனை செய்து பயங்கர மோசடி! : தெலுங்கானாவில் டாக்டர் உட்பட 25 பேர் கைது
செகந்திராபாத் : தெலுங்கானாவில் வாடகை தாய் பெயரில் மோசடி செய்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பச்சிளங்குழந்தைகளை, 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த பெண் டாக்டர் உட்பட 25 பேர் அடங்கிய மோசடி கும்பலை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். திருமணமாகியும் குழந்தை பெற முடியாமல் உள்ள தம்பதியர், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த முறையில் குழந்தை பெற விரும்புவோரிடம் இருந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூலித்து வருகின்றன.
இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு பிறந்த குழந்தைகளை, வாடகை தாய் மூலம் பெற்றதாக பொய் சொல்லி மோசடியாக 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்த தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் டாக்டர் நம்ரதா உள்ளிட் டோரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
நம்ரதா கைது
இங்குள்ள செகந்திராபாதைச் சேர்ந்தவர் டாக்டர் அதுலுரி நம்ரதா. மகப்பேறு டாக்டரான இவருக்கு தெலுங்கானாவின் செகந்திராபாத், ஆந்திராவின் விசாகப்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் எட்டு மருத்துவமனைகள் உள்ளன.
இங்கு, கர்ப்பிணியர், கு ழந்தை பேறு இல்லாதோர் உள்ளிட்டோர் சி கிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், வாடகை தாய் பெயரில் மோசடியாக தங்களிடம் இருந்து, 32 லட்சம் ரூபாய் பறித்ததாக டாக்டர் நம்ரதா மீது, ஹைதராபாதைச் சேர்ந்த தம்பதி கடந்தாண்டு இறுதியில் புகாரளித்தனர்.
பண மோசடி விவகாரம் என்பதால், இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது .
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், நம்ரதாவுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இதில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, மோசடி நடந்தது உறுதியானதை அடுத்து, டாக்டர் நம்ரதா கைது செய்யப்பட்டார்.
வாடகை தாய் பெயரில் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் உள்ளிட்ட 25 பேரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
செகந்திராபாதில் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்த டாக்டர் நம்ரதா, கடந்த 2014 முதல் வாடகை தாய் பெயரில் மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் கருக்கலைப்பு செய்ய வந்தபோது, அவர்களை சமரசம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கச் செய்து, அந்த குழந்தைகளை, 'வாடகை தாய்' பெயரில் மோசடியாக அவர் விற்று வந்துள்ளார்.
குழந்தை பெற்ற பெண் களிடம் இருந்து குறைந்த விலைக்கு சிசுக்களை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு குழந்தையில்லா தம்பதியருக்கு நம்ரதா விற்று வந்துள்ளார்.
ஆண் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 4.5 லட்சம் ரூபாயும், பெண் குழந்தை என்றால் 3.5 லட்சம் ரூபாயும் அவர் தந்துள்ளார்.
பின், பெண் குழந் தையை 30 லட்சம் ரூபாய்க் கும், ஆண் குழந்தையை 40 லட்சம் ரூபாய்க்கும் விற்றுள்ளார். மோசடி துவங்கிய 2014 காலக்கட்டத்தில், 11 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற நம்ரதா, பின் படிப்படியாக விலையை உயர்த்தியுள்ளார்.
போலி பிறப்பு சான்றிதழ்
சமீபத்தில், குழந்தையில்லா ஒரு தம்பதிக்கு, வாடகை தாய் வாயிலாக பிறந்ததாக கூறி, ஒரு குழந்தையை 40 லட்சம் ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளார்.
இவை அனைத்தும், டாக்டர் நம்ரதாவின் மருத்துவமனைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஏற்கனவே குழந்தை பெற்ற பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களை மீண்டும் கர்ப்பம் தரிக்க வைத்து நம்ரதா குழந்தை பெற வைத்துள்ளார். அவ்வாறு குழந்தை பெறும் பெண்களுக்கு, தங்கள் மருத்துவமனையில் இலவசமாக அவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தேதியின் அடிப்படையில், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற விரும்பும் தம்பதியருக்கு, குழந்தை பிறப்பு தொடர்பான உத்தரவாதத்தை வழங்கி வந்துள்ளார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களை அடையாளம் காணவும், வாடகை தாய் சிகிச்சை பெற விரும்புபவர்களை கண்டுபிடிக்கவும், பல இடைத்தரகர்களை நிய மித்து அவர்களுக்கு நம்ரதா கமிஷன் வழங்கியுள்ளார்.
இந்த மோசடியின் ஒரு பகுதியாக, பிறந்த குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழ்களையும் அவர் உருவாக்கியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல மாதங்களாக ரகசியமாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், டாக்டர் நம்ரதா, இடைத்தரகர்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தம் உடையவர்களை அடையாளம் கண்டு, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.