காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்

17

சென்னை: ''காங்கிரசின் நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்டை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை திரும்ப பெற வேண்டும் என்று எல்லா கட்சிகளும் வலியுறுத்தினோம். ஆனாலும் சபாநாயகர் அதற்கு உடன்படவில்லை.

எதிர்க்கட்சி எம்பிக்களை இதேபோன்று இடைநீக்கம் செய்வது, பேச விடாமல் தடுப்பது, எதிர்க்கட்சி தலைவரையே பேசவிடாமல் தடுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.



அதனால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டு அவையின் பொதுச் செயலாளர் இடம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறோம்.

நம்புகிறோம்



அடுத்த மார்ச் 9ம் தேதி லோக்சபா கூடும்போது அது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று நம்புகிறோம். காங்கிரசின் நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது என்ற ஒற்றை நிலைபாட்டில் உறுதியுடன் இருக்கிறோம்.


இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே இடைவெளி இருந்தாலும், முரண்பாடு இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்வோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி நம்புகிறது. இந்த கூட்டணி பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தை கட்சி எடுக்காது. தேர்தலில் நாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து பேச்சு வார்த்தையின் போது முடிவு செய்யப்படும்.

அழுத்தம்



பாமகவை கூட்டணியில் இணைப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் 2011ல் ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டோம். ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க தொடர்ந்து பாமக செயல்பட்டு வருவதால், அவர்களோடு நாங்கள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள இயலாது என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.


தற்போது திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டிய அதிகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உண்டு. நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. அப்படி அழுத்தம் கொடுக்கவும் மாட்டோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement