இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்

34

ஈரோடு: இமயமாய் நிமிர வேண்டிய நான், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் படு பாதாளத்திற்கு போனேன் என்று தமது கடந்த கால அரசியல் முடிவை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசி இருக்கிறார்.

ஈராட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் வைகோ பேசியதாவது;

கடந்த காலத்தில் நான் சில பிழைகளை செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம்பகத் தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத் தன்மையை சுக்கு நூறாக்கியது. அதிமுக பொதுச்செயலாளர்(மறைந்த ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார்) என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தார்.

அதே அதிமுகவுடன் உடன்பாடு வைத்தததை போன்ற பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு.

நாம் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் ஒரு இடம்கூட ஜெயிக்க முடியாது என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 205 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க போகிறது. அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏக்களுக்கு குறையாமல் நாம் சட்டசபைக்குள் பிரவேசிக்கலாம். கட்சி புத்துயிர் பெறும்.

இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும், மீண்டும் நம் கதவை தட்டாது. இந்த வாய்ப்பை விட்டு விட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அவர்கள்(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆணித்தரமாக சொன்ன போது, திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்காக எனது குறிப்புகளை பெட்டியிலே வைத்து, மலைக்கோட்டை ரயிலுக்கு பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, தலைமை நிர்வாகிகள் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். இந்த முடிவை எடுக்க நேர்ந்தது ஏன் என்று நான் விளக்கம் தந்தேன்.

கலை உலகிலே பிரமாண்டமான திரைப்படங்கள் தந்த பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி போல ஆகிவிட்டேன். என் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று நான் சொன்னேன். இன்றுவரை எங்கோ நிமிர்ந்து இருக்கவேண்டிய நான், அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன். மீண்டும் அப்படி நான் ஆளாகி விடக்கூடாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

Advertisement