பிப்ரவரி 17ல் வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா; மோடி உட்பட 13 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

1

நமது நிருபர்




வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ள வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 13 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


மாணவர் போராட்டம், ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றங்களை சந்தித்த நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.


தாரிக் ரஹ்மானை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, வங்கதேச தேசியவாத கட்சி, வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியதுடன், 'இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்புகிறோம்' என, தெரிவித்துள்ளது.


இந்நிலையில் வரும் பிப்ரவரி 17ம் தேதி வங்கதேச பார்லிமென்டின் தெற்கு மண்டபத்தில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என அமைச்சரவை செயலாளர் ஷேக் அப்துர் ரஷீத் தெரிவித்தார்.


பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வாரா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


மொத்தம் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement