அசைக்க முடியாத வெற்றி!

'சாதாரணமாக எடை போட்டு விட்டோமோ...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி குறித்து பேசுகின்றனர், தெலுங்கானாவில் உள்ள அவரது அதிருப்தியாளர்கள்.

தெலுங்கானாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், ரேவந்த் ரெட்டியை முதல்வராக நியமித்தது, அந்த கட்சி மேலிடம்.

இதற்கு, தெலுங்கானா காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ரேவந்த் ரெட்டிக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர் இருக்கும்போது, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து, 2018ல் காங்கிரசுக்கு வந்தவருக்கு முதல்வர் பதவி வழங்குவதா?' என, பலரும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்., வெற்றி பெற்றது. டிசம்பரில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதிலும் பெரும்பாலான இடங்களை காங்., கைப்பற்றியது.

அடுத்தடுத்த வெற்றிகளால் காங்கிரசில் மட்டுமல்ல, தெலுங்கானா அரசியலிலும் அசைக்க முடியாத தலைவராக ரேவந்த் ரெட்டி உருவெடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், காங்கிரசுக்கு அசத்தலான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, 'இன்னும், 20 ஆண்டுகளுக்கு தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியை அசைத்துக் கூட பார்க்க முடியாது...' என, விரக்தியுடன் கூறுகின்றனர், அவரது அதிருப்தியாளர்கள்.

Advertisement