பேரார் சாலையில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்: 'செல்பி' மோகத்தில் சுற்றுலா பயணியர் தொல்லை

ஊட்டி: நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சில இடங்களில் காட்டெருமை தாக்கியதில் உயிர் பலி சம்பவங்களும் நடந்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்து உள்ளது. வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிகள்,

விளைநிலங்கள் , தேயிலைத் தோட்டம் , சாலையோரம் கூட்டமாக வந்து மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ஊட்டி, குன்னுார் உட்பட பல்வேறு பகுதிகளில், சாலையோரத்தில் சுற்றி தெரியும் காட்டெருமைகள் அருகில் சென்று, சுற்றுலா பயணியர் செல்பி எடுக்கும் மோகத்தில், அபாயத்தை உணராமல் தொந்தரவு செய்து வருகின்றனர். வனத்துறையினர் எச்சரித்தாலும் சிலர் தொல்லை படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில், ஊட்டி - கோத்தகிரி சாலையில் பேரார் சாலையோரத்தில் சுற்றித்திரிந்த ஏராளமான காட்டெருமையை பார்த்த அவ்வழியாக வந்த சுற்றுலா பயணியர் அபாயத்தை உணராமல் ' செல்பி ' எடுத்தனர்.

அவ்வழியாக வந்த மக்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர். கூட்டமாக காட்டெருமைகள் நாள்தோறும் வரும் இப்பகுதியில் வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement