பகிங்ஹாம் கால்வாயில் விடப்படும் கழிவுநீரால் அடையாறு மக்கள் தவிப்பு

சென்னை: ஓ.எம்.ஆரில் பிரதான கழிவுநீர் குழாயில் செல்லும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக கொண்டு செல்லாமல், பகிங்ஹாம் கால்வாயில் விடுவதால், அடையாறு பகுதிமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஓ.எம்.ஆர்., எஸ்.ஆர்.பி.டூல்ஸ் கழிவுநீர் உந்து நிலையம் சென்று, அங்கிருந்து பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக, ஓ.எம்.ஆரில் 2,200 எம்.எம்., திறன் கொண்ட கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய கைலாஷ் மற்றும் டைடல் பார்க் இடையே, மெட்ரோ ரயில் பணியால் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. அத்துடன் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோத இணைப்பு மூலம் கழிவுநீர் குழாயை சேதப்படுத்துகின்றனர்.

இந்த கழிவுநீர் குழாயில் இருந்து செல்லும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.

இதனால், அடையாறை சுற்றியுள்ள இந்திரா நகர், காந்தி நகர் பகுதி மக்கள் துர்நாற்றம், கொசுக்கடியால் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அடையாறு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கூறியதாவது:

இந்திரா நகரில் பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி 1.5 கி.மீ., துாரத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. காலை 6:00 மணி முதல் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால், அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நடைபயிற்சி செய்யும்போது மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. முதியோர் நடைபயிற்சி செய்ய சிரமப்படுகின்றனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குழாய் சேதமடையும்போது, உடனே சரி செய்கிறோம். கழிவுநீர் குழாயில் செல்ல தடையில்லை. இணைப்பு எடுக்காத, சில ஐ.டி., உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், கழிவுநீரை மழைநீர் வடிகாலில் திறந்து விடுகின்றனர்.

அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கழிவுநீர் குழாயையும் ஆய்வு செய்து, அதில் கழிவுநீர் சென்றால் தடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement