மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்


மும்பை: இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மும்பையில் பிரதம்ர மோடியை சந்தித்து பேசினார்.


பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகேட் உடன் இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவர் முதல்கட்டமாக மும்பையில் அவரது விமானம் தரையிறங்கியது. மும்பை விமான நிலையத்தில் அவரை, அம்மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ரட் மற்றும் முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.


தொடர்ந்து மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்ற மேக்ரான், அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு மஹாராஷ்டிரா கவர்னர் மாளிகையான லோக்பவனில் பிரதமர் மோடியை, இமானுவேல் மேக்ரான் சந்தித்து பேசினார். கவர்னர் மாளிகை வாசலில் மேக்ரானை கட்டியணைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.


இருவரும் ஏஐ துறையில் ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இரு நாட்டு உறவு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.


மேலும், இரு நாடுகளும் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் தயாரிப்பது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்தும் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement