விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை

குன்னுார்: மலை மாவட்டமான நீலகிரியில் விலையில்லா சைக்கிள்கள் திட்டம் பயனில்லாத வகையில் உள்ளது.

மாநில அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.

சமவெளிகளில் உள்ள மாணவர்களுக்கு சைக்கிள்கள் பெரிதும் உதவியாக இருந்தாலும், மலை மாவட்டத்தில் பெரும்பாலும் பயனற்ற திட்டமாக உள்ளது.

சமீபத்தில், குன்னுாரில், 6 பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், மலை மாவட்டத்தில் காலை, மாலை வேளையில் கடும் குளிர் நிலவுவதாலும், மேடு, பள்ளம் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், பெரும்பாலான மாணவர்கள், சைக்கிளை பயன்படுத்துவதில்லை. இதனால், அரசு சைக்கிள் பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், போதிய அரசு பஸ்கள் இல்லாத நிலையில், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களிலும், மினி பஸ்களிலும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். விலையில்லா சைக்கிள்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு லாரிகளில் ஈரோடு, அவினாசி உள்ளிட்ட பழைய இரும்பு குடோன்களுக்கு செல்கிறது.

இதற்கு தீர்வு காண, காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் அல்லது கல்வி உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement