தமிழக இடைக்கால பட்ஜெட்: தலைவர்கள் சொல்வது என்ன?

16


சென்னை: 2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:


முதல்வர் ஸ்டாலின்



இதுதான் வளர்ச்சி. தமிழகம்தான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட்டினை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்.

ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும், மத்திய பா.ஜ அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்.

தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்



இன்று தாக்கல் செய்யப்பட்டது திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் அல்ல, வெற்றுப் பெருமை பத்திரம். ஐந்தாண்டுகளாக ஏமாற்றத்திற்குப் பழகிய மக்களுக்கு இந்த ஏமாற்றமும் புதிதில்லை. மாற்றமும் தொலைவிலில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரையாகத்தான் இருந்ததே தவிர உருப்படியாக எதுவும் இல்லை. விவசாயிகளை ஏமாற்றும் வகையில் வேளாண் இடைக்கால பட்ஜெட் உள்ளது. பட்ஜெட்டில் உருப்படியாக ஏதுமில்லை. அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுக அரசு கூறுவது முற்றிலும் பொய். மக்களுக்கு அரசு காது குத்தி உள்ளது.

கடன் சுமை அதிகரிப்பது மாநில வளர்ச்சிக்கு நல்லது அல்ல. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் அளித்த வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றவில்லை. 2021ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்ற வில்லை. 26 ஆயிரம் கோடி அளவுக்கு மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது. நிதி நிலையை சீரமைக்க நிபுணர் குழு அமைத்த பிறகு அதிக கடன் அரசு வாங்கியுள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மீது வரி சுமை ஏற்படும். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். சட்டசபையில் நான் பேசினால் நேரலை கொடுக்க மாட்டார்கள்.

தமிழக பாஜ முன்னாள் தலைவர், அண்ணாமலை


கோவை, மதுரையில் மெட்ரோ திட்டம் மீது திமுக அக்கறை இல்லாததால் தான் திருத்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கவில்லையா? மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யாமல், எதற்கு இத்தனை லட்சம் கோடி கடன்? இந்த நிதி மொத்தம் எங்கே சென்றது? கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை. தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு டாக்டர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.


அவசர அவசரமா




கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்? தங்கம் தென்னரசு, அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது.


நகைச்சுவை




எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை.

Advertisement