ரஞ்சி கோப்பை: பைனலில் காஷ்மீர் * 67 ஆண்டில் முதன் முறையாக...

கல்யாணி: ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது காஷ்மீர் அணி.
மேற்குவங்கத்தின் கல்யாணியில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஜம்மு அண்டு காஷ்மீர், இரு முறை கோப்பை வென்ற பெங்கால் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பெங்கால் 328, காஷ்மீர் 302 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பெங்கால் அணி, 99 ரன்னுக்கு சுருண்டது. 126 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய காஷ்மீர் அணி, மூன்றாவது நாள் முடிவில் 43/2 ரன் எடுத்திருந்தது.
முதன் முறை
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. சுபம் (27), கேப்டன் பராஸ் (9) அவுட்டாக, காஷ்மீர் அணி 71/4 என திணறியது. பின் இணைந்த வன்ஷாஜ் (43), அப்துல் சமத் (30) ஜோடி அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்சில் 126/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை அரங்கில் 67 ஆண்டுக்கு முன் (1959) களமிறங்கிய காஷ்மீர் அணி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
கர்நாடகா அபாரம்
லக்னோவில் நடக்கும் அரையிறுதியில் கர்நாடகா, உத்தகாண்ட் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் கர்நாடகா 736 ரன் குவித்தது. உத்தரகாண்ட் அணி 233 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கர்நாடக அணி, நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 299/6 ரன் எடுத்து, 802 முன்னிலை பெற்றிருந்தது. ராகுல் (70) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement