கட்சி தாவி வந்தவருக்கு பதவியா?
'காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்கும்போது, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எந்த வகையில் நியாயம்...' என, கொதிக்கின்றனர், மஹாராஷ்டிர மாநில பா.ஜ., நிர்வாகிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மும்பை மாநகராட்சி, ஆசியாவிலேயே மிகப்பெரிய மாநகராட்சி என்ற பெருமையை பெற்றது.
கடந்த, 30 ஆண்டு களாக சிவசேனா கட்சி வசம் தான், இந்த மாநகராட்சி இருந்தது. சிவசேனாவைச் சேர்ந்தவர்களே மும்பை மாநகராட்சி மேயர் களாக பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, சிவசேனாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மேயர் பதவியை பெறுவதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் போட்டி போட்டனர். ஆனால், ரிது தாவ்டே என்ற பெண் நிர்வாகிக்கு தான் அதிர்ஷ்டம் அடித்தது. ரிது தாவ்டே மேயராக பதவியேற்றதும், மும்பையில் உள்ள பா.ஜ., மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதிலும், பெண் நிர்வாகிகள் கோபத்தில் கொந்தளித்தனர். 'ரிது தாவ்டே, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர். அவரது குடும்பமே காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. கட்சி தாவி வந்தவருக்கு முக்கியமான பதவியை கொடுத்தால், அப்புறம் நாங்கள் எதற்கு...?' என குமுறுகின்றனர், மும்பை பா.ஜ., பெண் நிர்வாகிகள்.