இதே நாளில் அன்று

பிப்ரவரி 21: இலங்கையின் யாழ்ப்பாணம், மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாத பிள்ளையின் மகனாக, 1855, மே 25ல், சென்னை, கோமளேஸ்வரன்பேட்டையில் பிறந்தவர், கனகசபை பிள்ளை.

இவரது தந்தை, ஆங்கில - தமிழ் அகராதி உருவாக்கும் பணிக்காக சென்னையில் குடியேறியதால், இவரும் சிறு வயதிலேயே சென்னை பல்கலையில் பட்டம் பெற்று, 'பாய் கிராஜுவேட்' என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து சட்டம் படித்து, மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார். சென்னை பல்கலை யில், தமிழ் மொழிபெயர்ப்பாளர், தபால் துறையில் கண்காணிப்பாளர் பொறுப்புகளை வகித்தார்.

இவர் முதன் முதலில், முறையான கால வரலாற்று ஆய்வுடன் தமிழர் வாழ்வியலை அணுகினார். சங்ககால மன்னர்களின் காலத்தை 'கஜபாகு காலம்காட்டி' என்ற புதிய முறையால் வரிசைப் படுத்தியதுடன், '1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற ஆங்கில நுாலையும் எழுதினார்.

'களவழி நாற்பது, கலிங்கத்து பரணி, விக்கிரம சோழன் உலா' உள்ளிட்ட நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அரிய ஓலைச்சுவடிகளை சேகரித்து, உ.வே.சாமிநாத அய்யருக்கு வழங்கி, அவரது ஆய்வுக்கு உதவியவர், தன் 50வது வயதில், 1906ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement