திருச்செங்கோடு பொன்காளியம்மன் கோவிலை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

3

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவிலை இடிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலத்தில், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பொன்காளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்த பழமையான கோவிலை, புனரமைப்பு என்ற பெயரில் இடிக்க, அறநிலையத்துறை முடிவு செய்ததால், பிரச்னை தொடங்கியது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2024-ல் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.


2025 டிசம்பரில் நடந்த பேச்சில், 'உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை பணி தொடங்கக்கூடாது' என, அறநிலையத்துறை ஆய்வாளர் உறுதியளித்திருந்தார்.


கடந்த பிப்., 5ல், திருச்செங்கோடு டி.எஸ்.பி., மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி கூட்டம் நடந்தது. அதில், 'உயர் நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றால் மட்டுமே பணி நிறுத்தப்படும். இல்லையென்றால், பிப்., 22ல் பாலாலயம் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


பாலாலயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, 16ல் ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமாரும், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் இது தொடர்பாக மனு அளித்தார்.இந்நிலையில், கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, பிப்., 24ல் விசாரணைக்கு வரவிருந்தது.


இதற்கிடையே, 'வரும், 22ல் கோவிலில் கட்டுமான பணிகளுக்காக பாலாலயம் செய்ய இருப்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, மனுதாரர் சந்திரசேகரன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


இதையேற்று, மதியம், நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, 'இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை மதியம் அவசர வழக்காக எடுத்துக்கொள்கிறேன். அதுவரை கோவிலை இடிப்பது உள்ளிட்ட எந்தவொரு மராமத்து பணிகளையும் அதிகாரிகள் தொடங்கக்கூடாது' என, தடை விதித்து உத்தரவிட்டார்.


இதையடுத்து, குமரமங்கலம் கோவிலில், எந்தவொரு பராமரிப்பு பணிகளும் தொடங்கவில்லை. இதனால் கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

நீதிபதி கண்டிப்பு



பொன்காளியம்மன் கோவில் வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், அரசு வக்கீல் அருண் நடராஜன், ''நாங்கள் கோவிலின் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மட்டுமே செய்கிறோம்,'' என, தெரிவித்திருந்தார். ஆனால், இன்றைய விசாரணையில், ''புனரமைப்பு பணிக்காக கோவிலின் ஒரு பகுதியை இன்று காலையிலேயே இடிக்க ஆரம்பித்து விட்டோம்,'' என, தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி பரதசக்கரவர்த்தி, ''மதியம், 1:45 மணி நிலவரப்படி கோவில் என்ன நிலையில் உள்ளதோ, அதே நிலையில் நீடிக்க வேண்டும். அதற்கு மேல் எந்த பராமரிப்பு பணியும் செய்யக்கூடாது,'' என, கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

Advertisement