நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்

21

திருப்பூர்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 6 பேர் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.



திருப்பூரில் வடமாநிலத்தினர் போர்வையில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் டில்லியில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் ஒட்டியவருடன், திருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் தொடர்பில் இருப்பது குறித்து டில்லி போலீசாருக்கு தெரியவந்தது.


டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், இரு எஸ்.ஐ. உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படையினர் கடந்த சில நாட்களாக திருப்பூரில் முகாமிட்டு தேடி வந்தனர். அதில், அம்மாபாளையத்தில் ஒருவர், பல்லடத்தில் மூன்று பேர் மற்றும் ஊத்துக்குளியில் இருவர் என, ஆறு பேரை போலீசார் பிடித்தனர்.


அவர்களை திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். நேற்று காலை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஜே.எம்- 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆறு பேரையும் அழைத்து சென்றனர்.


கைதான மிஜனுார் ரகுமான், 33, முகமது சாபேட், 35, உமர், 32, முகமது லிட்டன், 40, முகமது ஜாகீத், 40 மற்றும் முகமது உஜால், 29 ஆகிய 6 பேரும் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது டில்லி போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவர்களது மொபைல் போன்கள், போலியான ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்து, டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement