சைவம், வைணவம் குறித்து இழிவு பேச்சு: மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு

19

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, மார்ச் 24ம் தேதி நேரில் ஆஜராக, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கடந்த ஆண்டு ஏப்., 6ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.


அவரது அந்தப் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பின், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்; அமைச்சர் பதவியும் பறிபோனது.


இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூனில், தனிநபர் புகார் மனு தாக்கல் செய்தனர்.


மனுவில், 'வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பொன்முடியை தண்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த புகார் மனு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகார் மனுவை, மூன்றாவது மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் விசாரித்தார்.


அப்போது, 'பொன்முடியின் பேச்சுகள், வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகின்றன. அவருக்கு எதிரான புகாரை, விசாரணைக்கு ஏற்பதற்கு முகாந்திரம் உள்ளது' என கூறி, மார்ச் 24ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றத்தில் மார்ச் 24ல் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் பொன்முடிக்கு ஏற்பட்டு உள்ளது.

Advertisement