ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து

1

புதுடில்லி: அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.


போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சனிக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்தன.


வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு சேவைகளை ரத்து செய்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானப் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.


ஜெர்மனிய விமான நிறுவனமான லுப்தான்சா மார்ச் 7ம் தேதி வரை டெல் அவிவ், பெய்ரூட் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு விமான சேவைகளை ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியுள்ளது. ஈராக்கின் இர்பில் விமான நிலையம் அனைத்து விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Advertisement