இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ அமைச்சர் பலி

12


டெஹ்ரான்:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்போர் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்தக் காலத்திலும் அணு ஆயுதம் தயார் செய்ய மாட்டோம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. பல முறை பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை முதல் இஸ்ரேல், அமெரிக்க படைகள், ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. வழக்கமாக இரவு நேரத்தில் மட்டுமே தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்க படைகள், இந்த முறை பகல் நேரத்தில் தாக்குதல் நடத்தியது பலருக்கும் ஆச்சர்யம்.

டெஹ்ரானில் அதிபரும், மதகுருவான ஆட்சியாளர் கமேனியும் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்துள்ளது. இதில் முக்கிய ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கூட்டம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, இஸ்ரேலிய படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தாக்குதலில், ஈரான் ராணுவ அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை கமாண்டர் முகமது பாக்போர் ஆகியோர் கொல்லப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனியின் நிலை என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement