சோனியாவின் பேரனுக்கு காங்கிரசில் முக்கிய பதவி ?

2

புதுடில்லி: டில்லி காங்., தொண்டர்கள் மத்தியில், சமீபகாலமாக ஒரு இளைஞரின் பெயர் அதிகமாக அடிபடுகிறது. அவர், பிரியங்கா - -ராபர்ட் வாத்ரா தம்பதியின் மகன், ரெய்ஹான். 25 வயதாகும் இவர், ஏழு ஆண்டுகளாக, அவீவா பெய்க் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். கடந்த டிசம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

ரெய்ஹான், ஒவ்வொரு மாநிலத்திலும் கலை விழா நடத்தி வருகிறார். இந்த விழாவில் பேஷன் ஷோ, உணவு என, பல விஷயங்களும் உண்டு. காங்., ஆளும் மாநிலங்களில், இவரது நிகழ்ச்சி ஏறக்குறைய அரசியல் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. முதல்வர் உட்பட பல காங்., தலைவர்கள் இந்த விழாவிற்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.

விரைவில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் நிகழ்ச்சி நடத்த உள்ளார் ரெய்ஹான். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு மறைமுகமாக செய்து வருகிறது. விரைவில் ரெய்ஹானின் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாட்டி சோனியாவிற்கு ரெய்ஹான் மீது அதீத பாசமாம். எனவே, திருமணத்திற்கு பின், ரெய்ஹானுக்கு காங்கிரசில் முக்கிய பதவி கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 'இவரை பார்க்கும் போது, கணவர் ராஜிவின் முகம் நினைவிற்கு வருகிறது' என்கிறாராம் சோனியா. நம் ஊரைப் போலவே, இங்கும் பேரனுக்கு, 'ஜெ' போட வேண்டிய சூழ்நிலை, காங்., தொண்டர்களுக்கு வரும் போலிருக்கிறது.

Advertisement