கோழி தீவன லாரிகளால் கடும் சுகாதார சீர்கேடு

கரூர்: நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனம், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பாலக்காடு, கொச்சி, எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் இருந்து மாடு, ஆடு, மீன், இறைச்சி கழிவுகளைக் கொண்ட கோழி தீவனத்தை வேன், லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த லாரிகள் அனைத்தும், க.பரமத்தியை கடந்து நொய்யல் குறுக்குச்சாலை, வேலாயுதம்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. பெரிய பேரல்களில் இந்த தீவனம் மூடப்படாமல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதாக க.பரமத்தி பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'மினி வேன் மற்றும் லாரிகள் மூலம் கோழித்தீவனத்தை மூடாமல் கொண்டு செல்கின்றனர். இந்த வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லும்போது இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் திரவ கழிவுகள் கொட்டுகின்றன. இவற்றில் ஈ, கொசு மொய்த்து சுகாதாரகேடு ஏற்படுகிறது. நாய்கள் இதனை இழுத்து சென்று சண்டை போடுகின்றன. சுகாதாரகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement