டிரைவர், கண்டக்டர் தகுதி பெற்ற முதல் பெண்

தஞ்சாவூர்: அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில், டிரைவர், கண்டக்டருக்கான தகுதி பெற்று, முதல் பெண் பயிற்சி முடிந்து, விரைவில் பணியில் சேர உள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே சூரியனார்கோவிலைச் சேர்ந்தவர் ரம்யா, 33, கடந்த, 2018ல் சென்னையில் உள்ள தனியார் டிரைவிங் ஸ்கூலில், பயிற்றுநராக பணியாற்றினார். அப்போது, கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் உள்ள அரசு போக்குவரத்து பயிற்சி பள்ளியில், கடந்த, 2023ல் பயிற்சி பெற்று தேர்வானார். பிறகு, கோவையில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராகஒன்றரை ஆண்டு பணியாற்றி வந்தார். இதற்கிடையில், ரம்யா கண்டக்டரான தகுதிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார்.


இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவர், கண்டக்டருக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த வேலைக்கு ரம்யா விண்ணப்பித்து, தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக டிரைவருக்கான பயிற்சி பெற்று வருகிறார். விரைவில், சீர்காழியில் பணியில் சேர உள்ள நிலையில், நேற்று கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.



இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கும்பகோணம், கோட்ட அளவில், அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டராகான பயிற்சி, லைசன்ஸ் பெற்ற பணியில் சேரும் முதல் பெண் ரம்யா. இதே போல் மற்ற மண்டலங்களில், டிரைவர், கண்டக்டர் பணிகளில் ஏதேனும் ஒன்றில் பணியில் சேர உள்ளார்கள்' என்றனர்.

Advertisement