அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு

தர்மபுரி: தடங்கம் அருகே, சென்றாய பெருமாள் கோவில் முன்புள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கக்கோரி, கிராம மக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அனு அளித்தனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட பெருமாள் கோவில்மேடு பகுதியிலுள்ள, சென்றாய பெருமாள் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் குலதெய்வ வழிபாட்டிற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதேபோல் கோவில் அருகில் சீலைக்காரியம்மன் வழிபாடும் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.

இது போன்ற நிகழ்ச்சி களில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோவில் அருகே, 10 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை கட்ட, அரசுக்கு கோரிக்கை வைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

தற்போது, அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகிறார். எனவே, பக்தர்களின் நலன் கருதி, அரசு புறம்போக்கு நிலத்தினை தனிநபரிடம் இருந்து மீட்டு, ஹிந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement