ஈரான் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; துபாய் மாலில் நடந்து சென்ற அதிபர், இளவரசர்

3

துபாய்: ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும், துபாய் பட்டத்து இளவரசரும் அங்குள்ள மாலில் சர்வ சாதாரணமாக நடந்து சென்று மக்களை சந்தித்து பேசிய காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், துபாய் உள்ளிட்ட சக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது

இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான்பாதுகாப்பு அமைப்பு ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக அந்நாடு தெரிவித்தது. இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹமதான் பின் முகமது பின் ரஷித்தும் துபாய் மாலுக்கு சென்றனர்.

பெரிய பாதுகாப்பு வளையம் இல்லாமல், சுற்றுலா பயணியர் மத்தியில் சாதாரணமாக நடந்து சென்று உரையாடினர். அதிபர் ஷேக் முகமது ஒரு சிறுமியை அருகில் அழைத்து, அவள் கையை முத்தமிட்டு அன்போடு பேசினார். உணவகத்தில் அமர்ந்து காபி அருந்தினர். இப்படி ஒரு பதற்றமான சூழலில், தலைவர்களின் இந்த செயல், எங்கள் நாடு பாதுகாப்பானது, இயல்பு வாழ்க்கை தொடர்கிறது என்பதை உலகிற்கு காட்டும் விதமாகவே இருந்தது.

Advertisement