மடைகளை காப்பாற்றுங்க ஆபீசர்ஸ்

மேலுார்: மேலவளவில் கண்மாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும் மடை மீது ரோடு அமைப்பதாக ஒன்றிய அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.

கருப்பு கோயில் அருகே பறம்பு, அழகிரி கண்மாய் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இரண்டு கண்மாய்களும் அழகர் கோவில், முறி, சோமகிரி மலையில் இருந்து வரும் தண்ணீரால் நிரம்பும். இதன்மூலம் 500 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் ஒருபுறமும், வயல் மறுபுறமும் உள்ளது. இடையில் மேலவளவில் இருந்து கருப்பு கோவிலுக்கு செல்லும் ரோட்டை 2 மடைகள் மீதும் அமைக்கின்றனர்.

உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் கோபாலன் கூறியதாவது : மடை மீது சிமென்ட் சிலாப் அமைத்து மூடி உள்ளதால் கண்மாயிலிருந்து வரும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளை சுத்தப்படுத்த முடியாது. காற்றின் அழுத்தம் இருந்தால் தான் தண்ணீர் வெளியேறும். தற்போது மடைகளை மூடியதால் குறைந்த அளவு தண்ணீரே வெளியேறும். மடை மீது ரோடு அமைப்பதால் பாதிப்பு ஏற்படும். எனவே மடை அருகே ரோட்டை மாற்றி அமைப்பதுடன், ஏற்கனவே உள்ளது போல் மடையை திறந்தநிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும் என்றார்.

நீர்வளத்துறை முத்துக்குமார் கூறுகையில், ''மடை மீது அமைத்துள்ள மூடியை அகற்றி ரோட்டை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Advertisement