பதவி, தேடி வரும்!

'எங்கள் தலைவரின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் துவங்கி விட்டது...' என, மகிழ்ச்சியில் உள்ளனர், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத்தின் ஆதரவாளர்கள்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத், பேச்சாற்றல் மிக்கவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். அதன்பின், மோடி தலைமையிலான அரசிலும், மத்திய சட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

ஆனால், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தில், திடீரென அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இது, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மோடி, மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றபோதும், ரவிசங்கர் பிரசாத்துக்கு அமைச்சர் பதவி தரப் படவில்லை.

இந்த நிலையில் தான், லோக்சபா உரிமைகள் குழு தலைவராக, சமீபத்தில் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டார். எம்.பி.,க்களின் உரிமைகள் மீறப்படும் போதோ அல்லது சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படும் வகையிலான புகார்கள் எழும்போதோ, அதை விசாரிப்பதே, இந்த குழுவின் வேலை.

ரவிசங்கர் பிரசாத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கிடைத்துள்ளதால், 'இனி அடுத்தடுத்து பதவிகள் எங்கள் தலைவரை தேடி வரும்...' என, உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

Advertisement