வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு: வனத்துறையினர் மெத்தனம்; விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை : வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் வனத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயிர்களை, யானை, மயில், குரங்கு, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. சேதங்களை வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அடங்கல் சான்றை வனத்துறை அதிகாரிகளிடம் வழங்குகின்றனர். ஆனால், இழப்பீடு தொகை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆறு மாதங்கள் கழித்து இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, 17,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
மேலும், இழப்பீடு வழங்க பல்வேறு சான்றிதழ்களை கேட்டு வனத்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதால், விவசாயிகள் பலர் விண்ணப்பிக்கவே தயக்கம் காட்டுகின்றனர். எனவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு பெறும் நடைமுறைகளை எளிமையாக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement