திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்

சென்னை: 'எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது,' என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது! அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது.

அடாவடித்தனம் செய்யும் திமுகவின் உடன்பிறப்புகள், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், குடிபோதையில் தங்களையே மறந்த காவலர்கள் எனப் பெண்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கயவர்களைத் தனது நிர்வாகத் திறனின்மையால் வளர்த்துவிடும் போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement