தொலைநோக்கு திட்டம்?
'உண்மையிலேயே யோசித்து தான் செய்கிறாரா அல்லது யாராவது இவரை தவறாக வழிநடத்துகின்றனரா என்று தெரியவில்லையே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பற்றி அம்மாநில மக்கள் பேசுகின்றனர்.
நம் நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பல ஆண்டுகளாகவே மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. 'நாம் இருவர், நமக்கு இருவர்...' என, 1980களில் பிரசாரம் செய்யப்பட்டது.
பின், 1990களில், 'நாம் இருவர், நமக்கு ஒருவர்...' என, பிரசாரம் செய்யப்பட்டது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில், ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், ஆந்திராவில் மக்கள் தொகை மிகவும் குறைந்து, வயதானோர் அதிகரித்து, இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகள் பெறுவோருக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளார். இதன்படி, இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தை பெறும் பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு, 25,000 ரூபாய் நிதி உதவி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதாவது, 'மூன்றாவது குழந்தை பெறும் பெற்றோருக்கு, அந்த குழந்தை, 5 வயதை எட்டும் வரை, மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும்' எனவும் அறிவித்துள்ளார்.
'நம் மாநிலத்தை எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைய வைக்க, இதுவும் ஒரு தந்திரமோ...' என, நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர், ஆந்திர மக்கள்.