செஸ்: விலகுகிறார் ஹம்பி * போர் அச்சத்தினால்...

புதுடில்லி: போர் காரணமாக கேண்டிடேட்ஸ் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் ஹம்பி.
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.
பெண்கள் பிரிவில் திவ்யா, ஹம்பி, வைஷாலி என 3 இந்தியர் உட்பட 8 பேர் பங்கேற்பர். இதில் வெல்லும் வீராங்கனை, நடப்பு உலக சாம்பியன், சீனாவின் ஜு வென்ஜுனுடன் மோதுவார்.
இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததால், வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தவிர பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இத்தொடரில் இருந்து விலகும் முடிவில் உள்ளார் இந்தியாவின் ஹம்பி.
இதுகுறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கு ('பிடே'), இந்திய வீராங்கனை ஹம்பி கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், ''இரண்டு வாரம் முடிந்த பின்பும் போர் தொடர்கிறது. மேற்கு ஆசியாவில் பதட்டமான, நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இங்கு பயணம் செய்வது மிகவும் அபாயகரமானது,'' என்றார்.
'பிடே' தலைமை அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறுகையில், ''போர் நடக்கும் நாடுகளுக்கும், சைப்ரசிற்கும் அதிக துாரம் இல்லை. என்றாலும் இங்குள்ள அரசு, எந்த நாட்டுடனும் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொடரை திட்டமிட்டபடி நடத்த, இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் முடிவில் மாற்றம் இல்லை,'' என்றார்.

Advertisement