போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை

தட்சிணகன்னடா: போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு, சுள்ளியா ஜே.எம்.எப்.சி., நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவை சேர்ந்தவர் ரக்ஷித், 25. இவர் ஹெல்மெட் அணியாதது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது என, பல முறை போக்குவரத்து விதிகளை மீறினார். இவர் மீது சுள்ளியா போக்குவரத்து போலீசார், மூன்று வழக்குகள் பதிவு செய்திருந்தனர். சுள்ளியா ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், ரக்ஷித்துக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்தது. மூன்று வழக்குகள் தொடர்பாக, தலா ஐந்து நாட்கள் வீதம், 15 நாட்கள், சுள்ளியாவின் முக்கியமான ஜங்ஷன்களில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த வாசகங்கள் இடம் பெற்ற பலகையை பிடித்தபடி நிற்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மார்ச், 14ல் உத்தரவிட்டது.

அதன்படி ரக்ஷித், முக்கியமான ஜங்ஷன்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். கையில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற பலகையை பிடித்தபடி நின்றுள்ளார்.

Advertisement