கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்

மங்களூரு: பொய்யான புகாரில் கைதான கணவரை காப்பாற்றும்படி வேண்டிய பெண்ணை, ஆசைக்கு இணங்கும்படி இன்ஸ்பெக்டர் கட்டாயப்படுத்திதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தட்சிண கன்னட மாவட்டம், மூடபிதரேவில் வசிக்கும் நபரை, குற்ற வழக்கு தொடர்பாக மூடபிதரே போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த நபர் எந்த தவறும் செய்யவில்லை. பொய்யான புகாரில், அவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி விவரித்துள்ளார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் சந்தேஷிடம் கூறி, கணவரை விடுவிக்கும்படி அந்த பெண் மன்றாடினார். அப்போது இன்ஸ்பெக்டர் சந்தேஷ், 'உன் கணவரை விடுவிக்க வேண்டுமானால், எனக்கு, 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

'பணம் கொடுக்க முடியாவிட்டால், என் ஆசைக்கு நீ இணங்க வேண்டும். இங்கு போஸ்டிங் வாங்க, உள்துறை அமைச்சருக்கு, 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். என் ஆசைக்கு உடன்படாவிட்டால், உன் கணவரை ரவுடி பட்டியலில் சேர்ப்பேன்.

'நுாற்றுக்கணக்கான பெண்கள் என்னுடன் உள்ளனர். அதேபோன்று நீயும் என் ஆசைப்படி நடந்து கொள். இல்லாவிட்டால் போதைப் பொருள் விற்பவர்களை ஏவி, உன் மரியாதையை களங்கப்படுத்துவேன்' என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் சந்தேஷின் மிரட்டல் தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என, கைதான நபரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement