பொருத்தமான 'டி-20' போட்டி: சொல்கிறார் கேப்டன் சூர்யகுமார்

புதுடில்லி: ''எனக்கு ஏற்றது 'டி-20' போட்டி தான். இதில் தான் பிரகாசிக்க முடிகிறது,''என சூர்யகுமார் தெரிவித்தார்.


இந்திய 'டி-20' அணியின் கேப்டன் சூர்யகுமார், 35. இவரால் ஒருநாள் போட்டி (773 ரன், 37 போட்டி), டெஸ்டில் (ஒரு போட்டி, 8 ரன், எதிர், ஆஸி.,) சாதிக்க முடியவில்லை. 2023ல் நடந்த உலக கோப்பை பைனலில் (50 ஓவர், எதிர், ஆஸி.,) 28 பந்தில் 18 ரன் தான் எடுத்தார்.

வெற்றி கேப்டன்: ஆனால், 'டி-20' அரங்கில் மிரட்டுகிறார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசுவதால், 'மிஸ்டர் 360 டிகிரி' வீரர் என அழைக்கப்படுகிறார். 113 'டி-20' போட்டியில் 4 சதம், 25 அரைசதம் உட்பட 3272 ரன் (சராசரி 36.35, ஸ்டிரைக் ரேட் 162.94) குவித்துள்ளார். 'டி-20' அணியின் கேப்டனாக 2024ல் நியமிக்கப்பட்டார். இதற்கு பின் இந்தியா பங்கேற்ற 52 போட்டியில் 42ல் வெற்றி தேடித் தந்தார். சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் அசத்திய இவர், 242 ரன் (9 போட்டி) எடுத்து, இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.


இது பற்றி சூர்யகுமார் அளித்த பேட்டி: டெஸ்டில் விளையாட பிடிக்கும். ஆனால் ஒரே இன்னிங்ஸ் (எதிர், ஆஸி., 8 ரன்) தான் வாய்ப்பு கிடைத்தது. நம் தலைவிதியில் என்ன எழுதி இருக்கிறதோ, அது தான் வாழ்வில் நடக்கும். ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக 10-12 ஆண்டுகள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடினேன். பின் மெதுவாக 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தேன். ஒருநாள் போட்டிகளில் சாதிக்க முடியவில்லை. 'டி-20' தான் எனது ஆட்ட பாணிக்கு ஏற்றதாக உள்ளது. இதில் அதிரடியாக விளையாடுகிறேன்.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை மூன்றுவிதமாக விளையாட வேண்டும். துவக்கத்தில் விக்கெட் சரிந்தால், டெஸ்ட் போல மந்தமாகவும், நடுவில், ஒருநாள் போட்டிக்கு உரிய முறையில் 'ஸ்டிரைக் ரேட்டை' உயர்த்த வேண்டும். கடைசி கட்டத்தில் 'டி-20' போல விளாச வேண்டும். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறப்பாக விளையாட முயற்சித்தும், சவாலானதாகவே இருந்தது. 2023, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் விளையாடினேன். இதை, 2024, 2026 'டி-20' உலக கோப்பை தொடருடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.


இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.

2-3 அணிகள் 'ரெடி'

சூர்யகுமார் கூறுகையில்,''டி-20 அரங்கில் இந்தியாவின் அடித்தளம் வலுவாக உள்ளது. இங்கு திறமைக்கு பஞ்சம் இல்லை. பிரிமியர் தொடர், உள்ளூர் போட்டிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்கள் உருவாகின்றனர். 2-3 இந்திய 'டி-20' லெவன் அணிகளை தயார் செய்யலாம். அணியின் கூட்டு முயற்சியால் உலக கோப்பை வெல்ல முடிந்தது. போட்டி சூழலுக்கு ஏற்ப துணிச்சலாக பேட் செய்வேன். பயிற்சியாளர் காம்பிர் உடன், அண்ணன்-தம்பி போன்று நல்லுறவு உள்ளது. இந்திய அணிக்காக நாங்கள் இருவரும் தனித்தனியே பரிந்துரை செய்த 15 பேர் பட்டியலில், 14 பெயர்கள் ஒன்றாக இருந்தன. இது எங்களது சிந்தனை ஒரே மாதிரி இருப்பதை உணர்த்தியது,''என்றார்.

இருவர் செய்த மாயம்

சூர்யகுமார் கூறுகையில்,''உலக கோப்பை தொடருக்கு இஷான் கிஷானை தேர்வு செய்யும்படி எனது உள்ளுணர்வு சொன்னது. அவரிடம்,'உலக கோப்பை வென்று தருவாயா? என கேட்டேன். அவர்,'உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதா,' என்றார். 'ஆம்' என்று பதில் அளித்தேன். அபாரமாக விளையாடினார். இவருக்காக ஜிதேஷ் சர்மாவை நீக்கியது கடினமான முடிவு. துவக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டதும், ஆட்டத்தின் போக்கு மாறியது. அதிரடியாக ரன் சேர்த்து, திறமை நிரூபித்தார்,''என்றார்.

Advertisement