ரசாயன நெடியை சுவாசித்த 3 வயது குழந்தை பலி மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை

புதுடில்லிடில்லியில், ரசாயன நெடியை சுவாசித்ததால், 3 வயது குழந்தை பலியானது. மற்றொரு, 7 வயது பெண் குழந்தை கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தைகள் சுவாசித்த ரசாயன நெடி, எதிலிருந்து வெளிவந்திருக்கலாம் என தடய அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறு மதியம், 2:20 மணிக்கு, கிழக்கு டில்லியின் காசியாபூர் அருகே உள்ள ஆசிர்வாத் அபார்ட்மென்ட் என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் தன் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் டெய்லர் ஒருவர் வசித்து வந்தார்.

அந்த டெய்லர் வழக்கம் போல, அந்த நேரத்தில் தன் கடையில் இருந்தார். 3 வயது பெண் குழந்தை மற்றும் 7 வயது பெண் குழந்தை மட்டும், ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, முதலில், மயக்கம் அடைந்த 3 வயது பெண் குழந்தை, சிறிது நேரத்தில் இறந்தது. அடுத்த சில நிமிடங்களில், 7 வயது பெண் குழந்தை மயக்கம் அடைந்தது.

இரு குழந்தைகளையும் அருகில் உள்ள நொய்டா நகரின் செக்டார் 11ல் இருந்த அரசு மருத்துவமனையில், உறவினர்கள் அனுமதித்தனர். அந்த குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், கெட்ட நெடியை சுவாசித்ததால், அந்த குழந்தைகள் மயங்கி இருக்கலாம் என கூறினர். அதன் பின், 7 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த குழந்தைகள் சுவாசித்த நெடி என்னவென தெரியாததால், அது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த குழந்தைகளின் வீடு அருகே உள்ள ரசாயன ஆலையில் இருந்து நெடி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் அபாயகரமான நச்சு எதுவும் அந்த ஆலையில் இருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது.

அவ்வாறு வெளியேறி இருந்தால், அருகில் உள்ள வீடுகளில் வசித்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என ரசாயன ஆலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Advertisement