ஆத்துார் வாலிபர் கொலை: நண்பர் உட்பட இருவர் சரண்

மறைமலை நகர்: கல் மற்றும் கத்தியால் தாக்கப்பட்டு, ஆத்துார் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்; இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 28; நெல் நடவு செய்யும் இயந்திரம் இயக்கும் பணிபுரிந்தார்.

செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் அருகே, இவரை நான்கு பேர் அடங்கிய மர்ம கும்பல் நேற்று முன்தினம் சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டி தலையில் கல்லை போட்டும், கொலை செய்து தப்பி சென்றனர்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; அங்கு இரவு உயிரிழந்தார். சிங்கபெருமாள் கோவில் போலீசார் விசாரித்தனர்.

இதில், பகத்சிங் நகரைச் சேர்ந்த அஜித், 30, அவரது நண்பரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ், 30, ஆகியோர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

நெல் நடவு நடும் இயந்திரம் இயக்கும் வேலை பார்க்கும் சந்திரன், அந்த வாகனத்திற்கு பொருட்கள் வாங்க செட்டி புண்ணியத்தில் உள்ள அஜித் கடைக்கு சென்று வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். பின், அஜித்தின் நண்பர்களான விஜயகுமார், குண்ணவாக்கத்தைச் சேர்ந்த அமுல்ராஜ், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோருடனும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இரு மாதங்களுக்கு முன், அனைவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், விஜயகுமாரை சந்திரன் தாக்கியுள்ளார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, விஜயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து சந்திரனை நேற்று முன்தினம் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான இருவரை தேடி வருகிறோம். விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement