அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல் மற்றும் மக்காச்சோளத்தின் வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் நெல் மற்றும் மக்காச்சோளம் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 5,700 மூட்டை நெல், 2,700 மூட்டை மக்காச்சோளம், 80 மூட்டை உளுந்து, 135 மூட்டை கம்பு, திணை, தட்டை பயிர், பனிப்பயிர் என மொத்தம் 743.70 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் 2.1 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது. மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக 1,820 ரூபாயும், குறைந்த விலையாக 1400 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதேபோல் உளுந்து ஒரு மூட்டை அதிகபட்ச விளையாக 8,339 ரூபாய்க்கும், குறைந்த விலையாக 7,655 ரூபாய்க்கும் விற்பனையானது.

நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வரத்து சீரான அளவில் இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

Advertisement