எரிந்த நிலையில் 4 பேர் சடலம் காரில் இருந்து மீட்பு; நெல்லை அருகே மர்ம சம்பவம்

11

நமது நிருபர்




திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலையில், மர்மமான முறையில் எரிந்த காரில் இருந்த 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக இன்று (மார்ச் 17) காலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் எரிந்து கிடப்பதைக் கண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்:

எரிந்த நிலையில் உள்ள காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் குழந்தைகள்.

அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில், கார் விபத்துக்குள்ளான காரணத்தினால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், காரில் இருந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம், தற்செயலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.



சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காரின் பாகங்கள் மற்றும் அங்குள்ள தடயங்களைச் சேகரித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் விவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


காரில் இருந்தவர்கள் சென்னையை சேர்ந்த முகமது ரபி, செய்யது நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் சொந்த வீட்டை விற்பனை செய்த நிலையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்


@block_B@

தற்கொலையா?

காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் 1 லிட்டர் தண்ணீர் கேன்கள் 3 அதேபோல் 1 மதுபாட்டில் கிடந்துள்ளது. அதில் 1 பாட்டிலில் மட்டும் பாதியளவு தண்ணீர் இருந்துள்ளது. காரில் உள்ள 4 உடல்களும் ஒரே குடும்பமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் போன்ற ஏதேனும் காரணத்தினால் காருக்குள் இருந்து கொண்டு பெட்ரோலை ஊற்றி தீவைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.block_B



@block_Y@

நேரில் விசாரணை

சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இது காலையில் நடந்த விபத்து போல் தோன்றுகிறது. ஏனெனில் காரை தொட்டு பார்க்கும்போது அதில் வெப்பம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தடய அறிவியல் நிபுணர்கள் வந்து பார்வையிட்டு வருகிறார்கள். எரிந்த நிலையில் உள்ள உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை. விபத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்பது தான் தற்போதைய தகவல். இவ்வாறு அவர் கூறினார்.block_Y


@block_P@

சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு

தீயில் எரிந்ததால் காரின் பதிவெண் கூட தெளிவாக தெரியவில்லை. அந்த அளவுக்கு கார் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் திசையன்விளை-நாங்குநேரி மெயின்ரோட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் காரின் பதிவெண் தெரிகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கார் எத்தனை மணிக்கு அந்த சாலையில் சென்று இருக்க வேண்டும், எத்தனை மணிக்கு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதை அறிந்திட பிரதான சாலையில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. block_P


@block_G@

மோப்பநாய் சோதனை

சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் துப்பறியும் நாய் ரிக்கி சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாராவது வந்திருக்கலாமா என்ற விசாரணையும் நடக்கிறது.block_G

Advertisement