கட்டெறும்புகளின் குட்டிக்கரணம்!

15

-நமது நிருபர்-




தமிழக காங்கிரஸ் கட்சியின் பலம் பற்றி பிரபல அரசியல் தலைவர் சொன்ன அந்த வாசகம், மிகவும் பிரசித்தம். 'தமிழகத்தில் இருக்கும் அத்தனை காங்கிரஸ்காரர்களையும் ஒரே வேனில் ஏற்றிச்சென்று விடலாம். அப்போதும் கொஞ்சம் காலியிடம் இருக்கும்' என்பது அந்த முதிர்ந்த தலைவரின் கருத்து.


'ஆளே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு இத்தனை இடங்கள்' என்று கேட்டு, கூட்டணிக்கு தலைமை வகித்த திமுகவிடம் அவர் வாதிட்டதும் உண்டு. அத்தகைய பலம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு, முந்தைய தேர்தலை காட்டிலும் 3 தொகுதிகளை சேர்த்துக் கொடுத்து, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது திமுக. அதையே காரணம் காட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கூடுதல் தொகுதி கேட்கத் தொடங்கி விட்டனர்; மூன்று முறை பேசியும் முடிவு எதுவும் ஏற்படவில்லை.




'கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, 'கடந்த முறை பெற்ற தொகுதி எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடியாது' என்றும் திட்டவட்டமாக கூறி இருக்கிறது. இரு தரப்பிலுமே, 'சிக்கல் எதுவும் இல்லை' என்ற சப்பைக்கட்டுகளுக்கு மட்டும் குறைவில்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம், காங்கிரஸ் கட்சியினர் தான் என்று புலம்பித் தீர்க்கின்றனர் திமுக நிர்வாகிகள்.


தவெகவுடன் கூட்டணி என்று தினமும் பேசிப்பேசியே தங்கள் தலைமையை அச்சுறுத்தி, கூடுதல் தொகுதி வாங்கி விட்டதாக, திமுக தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி இருக்கிறது. ஆனாலும், ஏதோ வெளியில் சொல்ல முடியாத காரணங்களால் காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொள்ளும் திமுக தலைமை, கம்யூனிஸ்ட்களை தொகுதிகளை குறைக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.


கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான பலத்தை மக்கள் நலக்கூட்டணி காலத்திலேயே திமுக உணர்ந்து தெளிந்து விட்டது. 'போக்கிடம் இல்லாதவர்கள்' என்பதால், அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தி அலைக்கழிக்கிறது. வேறு வழியில்லாமல் அவர்களும் அறிவாலயத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். காரணம், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பது, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கச்சிதமாகப் பொருந்துவது தான்.


கட்டெறும்பாக மாறியது மட்டுமின்றி, குட்டிக்கரணமும் அடித்தால் தான் சீட் வாங்க முடியும் என்ற நிலையில் இருக்கின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியினர். இப்படி மானம் இழந்து, மரியாதை இழந்தாலும், அறிவாலய வாசலில் நின்றபடி, 'பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை' என்று அவர்கள் பேட்டி கொடுப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

Advertisement