கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை நெல்லை கொண்டு வருவதில் சிக்கல் பதிய மறுப்பதால் பரிதவிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலைய இடத்தில் திருவிழாவை காரணம் காட்டி பதிய மறுப்பதால் அறுவடை நெல்லை கொண்டு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப் பிரச்சனையோடு சாரல் மழை பெய்வதால் விவசாயிகள் வேறு வழியின்றி நெடுஞ்சாலை பகுதிகளை களமாக மாற்றி அவதிக்குள்ளாகின்றனர்.

ராஜபாளையம் தென்காசி ரோடு மாரியம்மன் கோயில் எதிரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் ஜன. 24 முதல் செயல்பட்டு வருகிறது. கருங்குளம், செங்குளம், அலப்பச்சேரி உள்ளிட்ட 10 க்கும் அதிகமான கண்மாய் பாசன நெல்லை இங்கு கொண்டு வருவர்.

இந்த ஆண்டு விளைச்சல் அதிகமானதுடன் சந்தையில் விலை குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் அரசின் நெல் கொள்முதல் நிலையத்தையே நாடினர்.

தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் வரத்து அதிகமானதால் கூடுதல் இயந்திர கோரிக்கைக்கு பின் மற்றொரு பதர் நீக்கும் இயந்திரத்தை கொண்டு வந்து கொள்முதலை தீவிரபடுத்தினர்

இருப்பினும் அருகிலுள்ள சேத்துார், தேவதானம், முகவூர் பகுதிகளில் செயல்பட்ட நிலையங்களில் கொள்முதல் முடிந்ததால் அங்குள்ள விவசாயிகளும் இப்பகுதியை நாடுகின்றனர்.

இதனால் வரிசைப்படி 75 க்கும் அதிகமான சிறு குறு விவசாயிகள் காத்திருக்கும் சூழலில் புதிதாக கொள்முதல் பதிய வரும் விவசாயிகளையும்

ஏப். 24-ல் தொடங்க உள்ள திருவிழாவை காரணம் காட்டி அதிகாரிகள் தவிர்க்கின்றனர். இதனால் அறுவடை நெல்லை வாய்ப்புள்ள சிலர் நெடுஞ்சாலை, ரோட்டோரம் உள்ளிட்ட இடங்களில் கொட்டி காவல் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை அறிவிப்பு உள்ளதால் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க வழி இன்றி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement