கூடுதல் கட்டணம் தந்தும் பயணியருக்கு மன உளைச்சல்! நெரிசலில் திணறும் பிரீமியம் 'ஏசி' பஸ்கள்
சென்னை: சென்னையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 'பிரீமியம் ஏசி' பேருந்துகள், நெரிசலில் சிக்கி திணறுவதால், உரிய நேரங்களுக்கு செல்ல முடியாமல், பயணியர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் கொடுத்தும், மன உளைச்சலில் தவிக்கும் நிலை தேவையா என, பயணியர் நொந்து நுாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'பிரீமியம் ஏசி' பேருந்து சேவை, கடந்த 11ம் தேதி துவங்கப்பட்டது.
பொதுமக்கள் தனியார் வாகன பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிப்பதே, இந்த பேருந்து சேவையின் நோக்கம்.
சென்னையின் முக்கிய மற்றும் பொதுமக்கள் பயன்பாடு அதிகமுள்ள வழித்தடத்தில், கூட்ட நெரிசலை குறைப்பதோடு, பயண தரத்தை மேம்படுத்தவும், பிரீமியம் பேருந்துகள் இயக்கப்படுவதாக, எம்.டி.சி., அறிவித்தது.
முதற்கட்டமாக கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில், இரண்டு பேருந்துகள், கோயம்பேடு - சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா வழித்தடத்தில், மூன்று பேருந்துகள் என, ஐந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், அறிவித்தபடி சரியான நேரத்துக்கு பேருந்துகள் செல்வதில்லை. மேலும், வழக்கமான பேருந்துகளை போல், இந்த பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுவதால், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பயணியர் புகார்
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
பயணியர் வசதிக்காக, புதிதாக பிரீமியம் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. 'சென்னை ஒன்' என்ற மொபைல் போன் செயலி வழியில் மட்டுமே டிக்கெட் பெற முடியும். குறைந்தபட்சம் 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம்.
இலவச 'வைபை' வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி நிறுத்துவதற்கான இடவசதி, ஒவ்வொரு இருக்கையிலும், தலா ஒரு சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஆனால், பேருந்து இயக்கத்தில் குளறுபடி உள்ளது. பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்து பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதுபோல், பேருந்து எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை செயலி வாயிலாக பார்க்கவும் முடியவில்லை. வழக்கமாக செல்லும் பேருந்துகளை போல், இந்த பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, குறித்த நேரத்தில் உரிய இடத்தை சென்றடைய முடியாமல் திணறி வருகிறது. எனவே, இந்த பேருந்துகளை சீராக இயக்க, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்துகள் மட்டுமே செல்லும் பிரத்யேக பாதை திட்டத்தை செயல்படுத்தி, இதுபோன்ற பேருந்துகளை இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@ வழிகாட்டும் குஜராத் குஜராத் மாநிலம், ஆமதாபாதில், பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், பேருந்துகளுக்கான தனி பாதை திட்டம், 15 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. பல்வேறு முக்கிய சாலைகளில், 160 கி.மீட்டருக்கு பேருந்துகளுக்கான தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட பேருந்துகளில், தினமும் 4 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். அதாவது, நான்கு வழிச்சாலையின் நடுவில், இரு வழி பாதையாக இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப, தேவையான இடங்களில் மேற்கூரை, இருக்கை, மின்விசிறி போன்ற வசதிகளுடன் பேருந்து நிலையங்களும் உள்ளன. இந்த நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்றினால், அரசின் நோக்கம் நிறைவேறும்; பயணியரும் நிம்மதியாக பயணிப்பர்.block_B
மேலும்
-
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அறிக்கை அனுப்ப பொது பார்வையாளர் உத்தரவு
-
மோகன் நகர் சக்தி விநாயகருக்கு வரும் 25ல் மகா கும்பாபிேஷகம்
-
மின்வாரியத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை இட மாற்ற உத்தரவு
-
நுாறு சதவீதம் வாக்களிப்பு: தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.151க்கு விற்பனை
-
பிரதான குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு