தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம்: நயினார் நாகேந்திரன்

19

சென்னை: பாஜவிற்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, ''எண்ணிக்கை முக்கியம் கிடையாது. எண்ணம் தான் முக்கியம்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இன்னும் முதல்வர் ஸ்டாலின் மொழியை பற்றி பேசி கொண்டே இருக்க கூடாது. தமிழக மக்களுக்கு என்ன நன்மை வேண்டுமோ, அதை தான் முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும். தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு உட்பட எல்லா மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். வட இந்தியாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் 25 சதவீதம் பேர் இருக்கின்றனர்.


அந்த மொழியை சார்ந்தவர்களின் ஓட்டு எல்லாம் முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறாரா? ஹிந்துக்களின் ஓட்டு வேண்டாம் என்று சொல்கிறார்களா? நாளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகிறார். நாளை தொகுதி பங்கீடு பேச்சு நடத்த இருக்கிறோம்.


கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எங்கு நடக்கிறது என்பதை நாளைக்கு வாங்க பார்க்கலாம். உலகத்துக்கே டில்லி தான் முடிவு எடுக்கிறது. அப்பறம் என்ன. டில்லி எடுக்கும் முடிவு நல்ல முடிவாக தானே இருக்கும். தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


மேலும் சாத்தூர் தொகுதியில் நீங்க போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என கேட்கப்பட்டதற்கு, இன்னும் அதெல்லாம் முடிவாகவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். பாஜவிற்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, ''எண்ணிக்கை முக்கியம் கிடையாது. எண்ணம் தான் முக்கியம்'' என கூறிவிட்டு நயினார் நாகேந்திரன் காரில் புறப்பட்டு சென்றார்.

Advertisement