அர்ச்சகர்கள் மனைவியிடம் நகை பறித்தவர் கைது

ராஜாஜிநகர்: தொழில் அதிபர் போல நடித்து, பல அர்ச்சகர்களின் மனைவியரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ராஜாஜிநகரில் வசிப்பவர் பிரவீன் பட், 40. இரண்டு மாதங்களுக்கு முன், வெஸ்ட் ஆப் கார்டு ரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

கோவில் அர்ச்சகரிடம், பிரவீன் பட் நைசாக பேச்சுக் கொடுத்தார். தன்னை தொழில் அதிபர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அர்ச்சகர் தட்டில், 1,000 ரூபாய் செலுத்தினார்.

பின், அர்ச்சகரின் மொபைல் நம்பரை வாங்கி, இருவரும் அடிக்கடி பேசினர். கடந்த, 1ம் தேதி அர்ச்சகருக்கு போன் செய்த பிரவீன் பட், புதிதாக துணிக்கடை திறந்து உள்ளேன். கடையை திறந்து வைக்க உங்கள் மனைவியை சிறப்பு விருந்தினராக அனுப்பினால் நன்றாக இருக்கும் என்றார்.

இதனை நம்பிய அர்ச்சகரும் தன் மனைவியை, பிரவீன் கூறிய இடத்திற்கு அனுப்பினார். 'துணிக்கடை திறப்புக்கு நிறைய பேர் வந்து உள்ளனர்.

கூட்ட நெரிசலில் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை திருட வாய்ப்பு உள்ளது. நகைகளை கழற்றி என்னிடம் கொடுங்கள். நிகழ்ச்சி முடிந்ததும் தருகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அர்ச்சகர் மனைவியும் நகைகளை கழற்றி கொடுத்தார். பின், அவரது கவனத்தை திசை திருப்பி விட்டு பிரவீன் தப்பி சென்றார். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் ராஜாஜிநகர் போலீசார் விசாரித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நேற்று முன்தினம் பிரவீன் பட் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 116 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பல அர்ச்சகர்களின் மனைவியரிடம் அவர் நகை பறித்ததும் தெரிய வந்தது.

பிரவீன் கைதாகி இருப்பதன் மூலம், ஹெப்பால், ராமமூர்த்திநகர், சிட்டி மார்க்கெட், ராஜாஜிநகர், சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த ஐந்து வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது.

Advertisement