46 கிலோ வெள்ளி கட்டி மோசடி வழக்கு: பட்டறை ஓனரின் மனைவி உட்பட 3 பேர் கைது

யானைக்கவுனி: வியாபாரியிடம் வாங்கிய, 46 கிலோ வெள்ளி கட்டியை திரும்ப தராமல் மோசடி செய்த வழக்கில், பட்டறை உரிமையாளரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சவுகார்பேட்டை, சின்ன நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார், 44; வெள்ளி வியாபாரி. இவர், வியாசர்பாடியைச் சேர்ந்த வெள்ளி பட்டறை உரிமையாளரான முருகன் என்பவரிடம், 2024ம் ஆண்டு ஆகஸ்டில், நகை செய்வதற்காக 30.50 கிலோ வெள்ளி கட்டியை கொடுத்துள்ளார்.

திடீர் உடல்நலக் குறைவால், அந்தாண்டு செப்டம்பரில் முருகன் உயிரிழந்தார். இதையடுத்து, பட்டறை ஊழியரான ஆசிப் என்பவரிடம், மேலும் சில நகைகள் செய்வதற்காக, திலீப்குமார் 15 கிலோ வெள்ளிக் கட்டியை கொடுத்துள்ளார்.

அந்தவகையில், மொத்தம் 45.50 கிலோ வெள்ளிக்கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் அப்போதைய மதிப்பு 43.22 லட்சம் ரூபாய்.

ஆனால், நகை ஏதும் செய்து தரப்படவில்லை. திலீப்குமார் வெள்ளிக்கட்டியை திருப்பி கேட்டபோது, பட்டறை உரிமையாளர் முருகனின் மனைவியான புளியந்தோப்பைச் சேர்ந்த தனலட்சுமி, 31, அவரது தந்தை வேதாச்சலம், 61, சகோதரர் சதீஷ்குமார், 39, ஆகியோர் அலைக்கழித்துள்ளனர்; கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் திலீப்குமார் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் தனலட்சுமி உட்பட மூன்று பேரும் சேர்ந்து, திலீப்குமாரிடம் இருந்து வாங்கிய வெள்ளிக் கட்டிகளை விற்பனை செய்து மோசடி செய்தது தெரிய வந்தது.

அந்த பணத்தில், வீட்டிற்காக வாங்கிய கடனை செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் புதிதாக கார் வாங்கியும், மற்ற செலவுகளை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement