புழல் அருகே ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு

புழல்: புழல் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் அருகே விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண்: 472ல் உள்ள 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதன், தற்போதைய சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற பொன்னேரி வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, குறிப்பிட்ட பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

அதேநேரம், இதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சிலவற்றிற்கு, முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement