கல்லுாரி 'டி - 20' மகளிர் கிரிக்கெட் எஸ்.என்.ஆர்., அணி 'சாம்பியன்'

சென்னை: சென்னையில் நடந்த கல்லுாரிகள் இடையிலான 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், பெண்கள் பிரிவில், எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லுாரி சார்பில், பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான 21ம் ஆண்டு, டி - 20 கிரிக்கெட் போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

தேசிய அளவில், இரு பாலருக்கும் நடத்தப்பட்ட இப்போட்டியில், பெண்கள் பிரிவில், குருநானக் 'ஏ, பி' மற்றும் எத்திராஜ், எஸ்.என்.ஆர்., ஆகிய நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் குருநானக் பி, எத்திராஜ் கல்லுாரி அணிகள் தோல்வியைத் தழுவ, குருநானக் 'ஏ' மற்றும் கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

நேற்று காலை நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், 'டாஸ்' வென்ற குருநானக் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் களமிறங்கிய எஸ்.என்.ஆர்., கல்லுாரி அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 127 ரன்கள் எடுத்தனர்.

அந்த அணியின் சுவேதா 64 பந்துகளில், 10 பவுண்டரிகள் உட்பட 73 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய குருநானக் கல்லுாரி அணியினர், 20 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 122 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவினர். அந்த அணியின் யோகஸ்ரீ, 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் எடுத்தார்.

இதனால், எஸ்.என்.ஆர்., கல்லுாரி அணியினர் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றனர். எஸ்.என்.ஆர்., கல்லுாரியின் சுவேதாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

Advertisement