'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்

புதுடில்லி 'சாலை வழியாக, மாடி பஸ்சில் பயணித்து, டில்லியின் அழகை காண, இதுவரை, 800 பேர் மட்டுமே முன்வந்துள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய டில்லி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களுக்கு, சுற்றுலாவாக பயணியர் சென்று மகிழ, மாடி பஸ்கள் இரண்டு, இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. திங்கள் கிழமை தவிர்த்து, வாரத்தின் பிற நாட்கள் இயக்கப்படும் இந்த பஸ்கள், பிப்ரவரி மாதம், 28ம் தேதி துவக்கப்பட்டது.

பெரியவர்களுக்கு, 500 ரூபாய்; சிறுவர்களுக்கு, 300 ரூபாய் கட்டணத்தில், மாடி பஸ்சில் பயணித்து, டில்லியின் அழகை பருகலாம். மத்திய டில்லியில் உள்ள பாரத் மண்டபம், தேசிய போர் வீரர் நினைவுச்சின்னம், புதிய பார்லிமென்ட் வளாகம், டில்லி ஹாட் போன்ற பல இடங்களை இந்த பஸ்சில் சென்று பார்வையிடலாம் .

ஒரு மாதமே ஆன நிலையில், இந்த மாடி பஸ் பயணத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. 800 பேர் தான் இதுவரை இந்த பஸ் பயணத்திற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதற்கு முன், சுவிதா என்ற பெயரில், 1989 வரை அமலில் இருந்த பழைய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள், மாடி பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.

இப்போதைக்கு, இரண்டு பஸ்கள் இந்த சுற்றுலா வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணியர் ஆர்வத்தை அடுத்து, அந்த பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, டில்லி போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement