அரசு பேருந்தில் திடீர் தீ 60 பயணியர் தப்பினர்

துாத்துக்குடி : துாத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பயணியருடன் சென்ற அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.


துாத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு சுமார் 7 மணி அளவில், அரசு பேருந்து ஒன்று பயணியரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
அப்போது, வாகைகுளம் அருகே பேருந்து சென்றபோது, ஆயில் டேங்கில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தியதால், பயணியர் அனைவரையும் கீழே இறங்கினர். உடனடியாக, தீ வேகமாக பரவி, பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது.
தகவலறிந்து விரைந்த, தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணியர் அனைவரும் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து, புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு பேருந்துகளை முறையாக பராமரிப்பின்றி இயக்குவதே, இது போன்ற தீ விபத்து மற்றும் விபத்து சம்பவங்களுக்கு காரணம் என பயணியர் குற்றம் சாட்டினர்.

Advertisement