சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் அ.தி.மு.க.,வினரிடையே போட்டி

வானுார்: வானுார் தொகுதியில் வேட்பாளர் அறிப்படாத சூழ்நிலையில், ஒவ்வொரு கிளைகளிலும் அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் எழுதுவதில் போட்டா போட்டி நிலவி வருகிறது.

வானுார் தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தல்களில் கடந்த 5 முறை அ.தி.மு.க., வேட்பாளர்களே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றனர். இந்த முறையும் வெற்றி பெற்று முத்திரை பதிக்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வேகம் காட்டி வருகின்றனர்.

இந்த முறை தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நேரடியாக களம் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சுவர் விளம்பரம் எழுதுவதில், வானுார் தொகுதி நிர்வாகிகள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு கிளைகளிலும், கட்சி நிர்வாகிகள் சுவரை பிடித்து விளம்பரம் எழுதுவதை தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு ஊராட்சியில் இரண்டு கிளை செயலாளர்கள் இருந்தால், அவர்களுக்குள் சுவரை பிடிப்பதில் போட்டா போட்டி நிலவி வருகிறது.

முந்திக்கொண்டு சுவற்றை பிடிக்கும் நிர்வாகிகள், அதில் இரட்டை இலை சின்னம், ஜெ., மற்றும் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே எழுதி வைத்துள்ளனர். வேட்பாளரின் பெயரை எழுதுவதற்கு இடம் விட்டு வைத்துள்ளனர். வேட்பாளர் அறிவிக்காத சூழ்நிலையில், சுவர் விளம்பரம் எழுதுவதால், அ.தி.மு.க.,வினரிடையே போட்டி நிலவி வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

Advertisement